
விரதம் 1ம் நாள் 02-11-2024(சனி)
விரதம் 2ம் நாள் 03-11-2024(ஞாயிறு )
விரதம் 3ம் நாள் 04-11-2024(திங்கள்)
விரதம் 4ம் நாள் 05-11-2024(செவ்வாய் )
விரதம் 5ம் நாள் 06-11-2024(புதன்)
விரதம் 6ம் நாள் 07-11-2024
(வியாழன்) ( சூரசம்ஹாரம்)
விரதம் 7ம் நாள் 08-11-2024(வெள்ளி)
(திருக்கல்யாணம்)
மாதந்தோறும் வரும் வளர்பிறை, தேய்பிறை பட்சங்களில் இரண்டு சஷ்டி திதிகள் வந்தாலும் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே முருக பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சஷ்டியாக உள்ளது. இதனை மகாசஷ்டி என்றும், கந்தசஷ்டி என்றும் குறிப்பிடுவதுண்டு. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி, சப்தமி வரையிலான ஏழு நாட்கள் இந்த விரதத்தை இருக்க வேண்டும். சஷ்டி அன்று சூரசம்ஹாரத்தை தரிசித்த பிறகு, சப்தமி திதியில் நடைபெறும் முருகப் பெருமானின் திருக்கல்யாணத்தை தரிசித்த பிறகே இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
சஷ்டி விரதம் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற முறையை, தங்களால் எதை கடைபிடிக்க முடியுமோ அந்த முறையை தேர்வு செய்து விரதம் இருப்பது சிறப்பு. அவரவர்களின் உடல்நிலை மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விரதம் இருக்கலாம்.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் 02ம் தேதி கந்தசஷ்டி விரதம் துவங்குகிறது. அன்றைய தினம் இரவு 08.06 மணி வரை பிரதமை திதி உள்ளது. அதனால் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, விரதத்தை துவக்கி விட வேண்டும். காப்பு கட்டுபவர்களும் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை துவக்கி விட வேண்டும்.
கந்தசஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அலங்காரம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, பகை கடிதல், சண்முக கவசம், வேல் மாறல் போன்ற எந்த பாடல் வேண்டுமானாலும் பாடலாம். ஓய்வில் இருக்கும் சமயங்களில் ஒரு நோட்டு வாங்கி, ஓம் சரவண பவ மந்திரத்தை எழுதலாம்.
குழந்தை இல்லாதவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சரியான வேலை கிடைக்கவில்லை, வருமானம் இல்லை, பகைவர்கள் தொல்லை, தீராத மனக்கஷ்டம், வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லை என்பவர் கந்தசஷ்டியில் விரதம் இருக்கலாம். முழு நம்பிக்கையுடன் விரதம் இருந்தால் நிச்சயம் முருகன் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றி வைப்பார்.