
கந்த சஷ்டி விரதம் 2024 ஆண்டு எந்த நாளில், எந்த நேரத்தில், எப்படி சஷ்டி விரதத்தை துவங்க வேண்டும், சஷ்டி விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள் என்னென்ன, விரதம் இருப்பவர்கள் எந்த மந்திரம் சொல்லி, முருகனை எப்படி வழிபட வேண்டும் .
கந்த சஷ்டி விரதம் 2024 நாள்
விரதம் 1ம் நாள் 02-11-2024(சனி)
விரதம் 2ம் நாள் 03-11-2024(ஞாயிறு )
விரதம் 3ம் நாள் 04-11-2024(திங்கள்)
விரதம் 4ம் நாள் 05-11-2024(செவ்வாய் )
விரதம் 5ம் நாள் 06-11-2024(புதன்)
விரதம் 6ம் நாள் 07-11-2024
(வியாழன்) ( சூரசம்ஹாரம்)
விரதம் 7ம் நாள் 08-11-2024(வெள்ளி)
(திருக்கல்யாணம்)
மாதந்தோறும் வரும் வளர்பிறை, தேய்பிறை பட்சங்களில் இரண்டு சஷ்டி திதிகள் வந்தாலும் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே முருக பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சஷ்டியாக உள்ளது. இதனை மகாசஷ்டி என்றும், கந்தசஷ்டி என்றும் குறிப்பிடுவதுண்டு. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி, சப்தமி வரையிலான ஏழு நாட்கள் இந்த விரதத்தை இருக்க வேண்டும். சஷ்டி அன்று சூரசம்ஹாரத்தை தரிசித்த பிறகு, சப்தமி திதியில் நடைபெறும் முருகப் பெருமானின் திருக்கல்யாணத்தை தரிசித்த பிறகே இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
சஷ்டி விரதம் முறைகள்
- ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது
- ஒரு வேளை மட்டும் உணவை தவிர்த்து விரதம் இருப்பது
3.சுவாமிக்கு நைவேத்தியம் செய்த அல்லது அபிஷேகம் செய்த ஒரு டம்ளர் பாலை மட்டும் ஒரு நாளில் எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது,
4.பாலுடன் பழமும் சாப்பிட்டு விரதம் இருப்பது
5.உப்பு இல்லாமல் தயிர் அல்லது பால் சாதம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது
6.மிளகு மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது(ஒரு நாளைக்கு ஒரு மிளகு ,ஆறு நாட்கள் 6 மிளகு) - ஒரு நாளைக்கு ஒரே ஒரு இளநீர் மட்டும்
8.வெறும் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருப்பது,
9.அரிசி பருப்பு இல்லாமல் வெறும் காய்கறி மற்றும் கீரைகள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது என பல வகைகள் உண்டு.
சஷ்டி விரதம் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற முறையை, தங்களால் எதை கடைபிடிக்க முடியுமோ அந்த முறையை தேர்வு செய்து விரதம் இருப்பது சிறப்பு. அவரவர்களின் உடல்நிலை மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விரதம் இருக்கலாம்.
கந்தசஷ்டி 2024 விரதம் துவக்க ஏற்ற நல்ல நேரம்
இந்த ஆண்டு நவம்பர் மாதம் 02ம் தேதி கந்தசஷ்டி விரதம் துவங்குகிறது. அன்றைய தினம் இரவு 08.06 மணி வரை பிரதமை திதி உள்ளது. விரதம் இருப்பவர்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, விரதத்தை துவக்கி விட வேண்டும். காப்பு கட்டுபவர்களும் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை துவக்கி விட வேண்டும்.
காப்பு கட்டி விரதம் இருக்கும் முறை :
காப்பு கட்டி விரதம் இருப்பவர்கள் ஒரு நூலில் மஞ்சள் தடவி, அதில் ஒரு விரளி மஞ்சள் வைத்து கட்டி கைகளில் கட்டிக் கொள்ளலாம். அல்லது வெறும் மஞ்சள் கயிறு மட்டும் கட்டிக் கொண்டு விரதம் இருக்கலாம். கணவன்- மனைவிக்கும், மனைவி-கணவருக்கும் மாறி மாறி காப்பு கட்டிக் கொள்ளலாம். அல்லது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கைகளால் காப்புக் கட்டிக் கொள்ளலாம். காப்பு கட்டி விரதம் இருப்பவர்கள் காலை, மாலை இரு வேளையும் குளித்து விட்டு முருகனுக்கு பூஜை செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் பகலில் தூங்கக் கூடாது. இரவில் மட்டுமே தூங்கலாம். எப்போதும் முருக சிந்தனையிலேயே இருக்க வேண்டும்.
கலசம் வைத்து பூஜை
கலசம் வைத்து முருகனை வழிபடுபவர்கள் ஒரு சொம்பில் நூல் சுற்றி, சந்தனம், குங்குமம் வைத்து, அந்த சொம்பில் வாசனை பொருட்களான ஏலக்காய், ஜாதிக்காய் போன்றவற்றை போட்டு, அதோடு ஒரு ரூபாய் நாணயம், ஒரு எலுமிச்சம் பழத்தை போட்டு, மேலே தேங்காய், மாவிலை வைத்து வழிபடவேண்டும். இந்த கலசத்தை ஒரு தட்டில் பச்சரிசி பரப்பி, அதன் மீது வைக்க வேண்டும்.
கலசம் வைத்த பூஜை செய்பவர்கள் நினைவு நாள் அன்று என்ன செய்ய வேண்டும்
நிறைவு நாளன்று கலசத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் தேங்காய், பழம் இதெல்லாம் கெட்டுப் போகாமல் இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம். கலசத்தில் உள்ள நீரை வீட்டில் தெளித்து விட்டு ,மீதமுள்ள தீர்த்தத்தை செடிகளில் தெளித்து விடலாம்.
முருகன் படம் வைத்து பூஜை
வீட்டில் உள்ள முருகன் படத்தை துடைத்து சுத்தப்படுத்தி சந்தனம், குங்குமம் தொட்டு வைத்து, சிவப்பு நிற மலர்களால் அலங்கரிக்க வேண்டும். சிவப்பு நிற மலர்கள் கிடைக்கவில்லை என்றால் இருக்கும் மலர்களைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும். வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், நைவேத்தியமாக காய்ச்சிய பால் தேன் கலந்து வைத்து வழிபட வேண்டும். முருகன் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து, வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு, விரதத்தை துவக்க வேண்டும். பெரியவர்கள் யாரும் இல்லை என்றால் முருகனிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு விரதத்தை துவக்கலாம்.
முருகன் படம் வைத்து பூஜை செய்கிறவர்கள் நிறைவு நாளன்று என்ன செய்வது?
படத்தில் உள்ள பூக்களை எல்லாம் பூஜை அறை குப்பையில் சேர்த்து விடுங்கள் மற்றும் முருகன் படத்தை துடைத்து புதிதாக சந்தனம் குங்குமம் இட்டு எந்த இடத்தில் இருந்து எடுத்தமோ அந்த இடத்திலேயே திரும்பும் வைத்து விடுங்கள்
காலை மாலை பூஜை
அதிகாலை எழுந்து குளித்துவிட்டு வீட்டில் உள்ள முருகன் படத்தை துடைத்து சுத்தப்படுத்தி சந்தனம், குங்குமம் தொட்டு வைத்து, சிவப்பு நிற மலர்களால் அலங்கரிக்க வேண்டும். சிவப்பு நிற மலர்கள் கிடைக்கவில்லை என்றால் இருக்கும் மலர்களைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும். வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், நைவேத்தியமாக காய்ச்சிய பால் தேன் கலந்து வைத்து வழிபட வேண்டும்.
மாலை விளக்கு ஏற்றி அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்லலாம்.
கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் விரதம் இருக்கலாமா ?
கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் பட்டினியாக இருந்து சஷ்டி விரதம் இருப்பதை தவிர்ப்பது நல்லது.
விரதம் இருப்பவர்கள் செப்பல் போடலாமா ?
விரதம் இருப்பவர்கள் செப்பல் போடக்கூடாது .
கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் காலை, மாலை இரு வேளையும் குளித்து விட்டு, அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். இரண்டு வேளையும் போக முடியாதவர்கள், ஒரு வேளை மட்டுமாவது செல்ல வேண்டும்.
மாதவிடாய் காலங்களில் விரதம் இருக்கலாமா ?
மாதவிடாய் காலங்களில் ஏதாவது சாப்பிட்டுவிட்டு விரதம் இருக்கலாம். மாதவிடாய் முடிந்த பின்பு பூஜை அறைக்கு சென்று முருகனை வழிபடலாம்
முருகனுக்கு சொல்ல வேண்டிய மந்திரங்கள்
கந்தசஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அலங்காரம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, பகை கடிதல், சண்முக கவசம், வேல் மாறல் போன்ற எந்த பாடல் வேண்டுமானாலும் பாடலாம். ஓய்வில் இருக்கும் சமயங்களில் ஒரு நோட்டு வாங்கி, ஓம் சரவண பவ மந்திரத்தை எழுதலாம்.
சூரசம்ஹாரம் அன்று என்ன செய்ய வேண்டும்
கோவிலுக்கு சென்று சூரசம்ஹாரத்தை பார்க்க முடிந்தால் பார்த்துவிட்டு அல்லது வீட்டிலேயே தொலைக்காட்சியில் திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை பார்த்துவிட்டு வீடு முழுவதும் துடைத்துவிட்டு விரதம் இருப்பவர்கள் குளித்துவிட்டு சுவாமிக்கு படையல் செய்து இளநீர் வைத்து பூஜை செய்ய வேண்டும் அன்று விரதம் முடிப்பவர்கள் படையல் போட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். அல்லது அடுத்த நாளில் திருக்கல்யாணத்தன்று விரதம் முடிப்பவர்கள் கோவிலுக்கு சென்று திருக்கல்யாணம் பார்த்துவிட்டு வந்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
திருக்கல்யாணம் அன்று என செய்ய செய்ய வேண்டும்
திருக்கல்யாணம் அன்று காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு சுவாமிக்கு தேவையான நெய்வேத்தியம் சமைத்துவிட்டு கோவிலுக்கு சென்று திருக்கல்யாணம் பார்த்துவிட்டு அங்கேயே அன்னதானம் சாப்பிடுபவர்கள் சாப்பிடலாம் அல்லது வீட்டுக்கு வந்து முருகருக்கு பூஜை செய்து படையல் போட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
விரதம் இருப்பவர்கள் கையில் கட்டிய காப்பை என்ன செய்வது?
திருக்கல்யாணம் முடிந்த பிறகு கோவிலுக்கு செல்ல முடியாதரவர்கள் வீட்டில் உள்ள பூஜை அறை குப்பையில் சேர்த்துவிடலாம். அல்லது கோவிலுக்கு செல்பவர்கள் கோவிலில் உள்ள ஐயர்களிடம் கொடுத்து விட்டு வரலாம்.
கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் முருகருக்கு
படைக்கவேண்டிய சிறப்பு பிரசாதங்கள்
நாள் 1 : காய்ச்சிய பாலுடன் தேன் மற்றும் பழம்
நாள் 2 : கோதுமை பாயாசம் அல்லது பருப்பு பாயாசம் ,தேங்காய் சாதம்
நாள் 3 : எலுமிச்சை சாதம்
நாள் 4 : புதினா சாதம்
நாள் 5 : தேனும் திணை மாவும் & பழங்கள்
நாள் 6 : சூரசம்காரம் விரதம் முடிப்பவர்கள் படையல் போட்டு முடிக்கலாம் அல்லது தயிர் சாதம் & சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியமாக படைக்கலாம்.
நாள் 7 : திருக்கல்யாணம் முடித்து கோவிலில் அன்னதானம் விரும்பியவர்கள் சாப்பிடலாம் அல்லது வீட்டில் அறுசுவை உணவை படையலிட்டு முருகனுக்கு படைக்கலாம்.
யாரெல்லாம் விரதம் இருக்கலாம்
குழந்தை இல்லாதவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சரியான வேலை கிடைக்கவில்லை, வருமானம் இல்லை, பகைவர்கள் தொல்லை, தீராத மனக்கஷ்டம், வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லை என்பவர் கந்தசஷ்டியில் விரதம் இருக்கலாம். முழு நம்பிக்கையுடன் விரதம் இருந்தால் நிச்சயம் முருகன் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றி வைப்பார்.